Thursday, September 5, 2013

கட்டு​ரை

நீர்நிலைகளைக் காப்போம்

 

   மலைகளில் இருந்து உருவாகி பாய்ந்தோடி வரும் நீரைச் சேமிக்க, வாய்க்கால்கள் மூலம் ஆற்றுப் பாசனப் பகுதியில்லாத இடங்களில் குளங்களாகவும், ஏரிகளாகவும் இயற்கையான நீர் சேமிப்புத் தொட்டிகளை உருவாக்கிவைத்தனர் நம்முடைய முன்னோர்கள்.
இவற்றின் நீர்ப்போக்கைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. வாய்க்கால்கள் மூலம் ஒரு குளம் நிரம்பி, அடுத்த குளத்துக்கும் நீர் செல்ல பாதை வைத்திருக்கிறார்கள்.

    இதேபோலத்தான் கோவில்களுக்குள் இருக்கும் குளங்களும். எல்லாக் குளங்களுக்கும் நீர்வழிப்பாதை உண்டு. இப்போது அவையெல்லாம் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்த தகவல்.குளங்கள், ஏரிகள் இல்லாவிட்டால்தான் என்ன என்ற மனப்பான்மை மக்கள் மத்தியில் வளர்த்துவிடப்பட்டிருப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏராளமான கோடிகளைக் கொட்டி ஆற்றுப் படுகைகளில் இருந்து தொடங்கப்பட்ட குடிநீர்த் திட்டங்கள், இந்த மனப்பான்மையை நீரூற்றி(!) வளர்த்து விட்டிருக்கலாம்.

    குடியிருப்புப் பகுதிகளுக்கு குழாய்களில் தண்ணீர் வரும்போது, அருகே ஏன் குளம், ஏரி என்று கேள்வி எழுப்புகிறார்கள் பலர். இதனால், நீர்வழிப் பாதைகளை அடைத்துவிட்டு, நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகளை எழுப்பி, வாய்ப்புள்ள குளங்களில் கூடாரம் எழுப்பி, கிணறு வெட்டி, டிராக்டர் விட்டு உழுது விவசாயம் பார்க்கும் "பெரிய' மனிதர்களும் இருக்கிறார்கள்.
இன்னும் பல இடங்களில், அரசு சொத்தான குளம், ஏரிகளை பட்டா போட்டு விற்று கைமாற்றிவிட்ட சோகங்களும் இருக்கின்றன. சில இடங்களில் அரசே குளங்களை மூடிவிட்டு கட்டடங்களை எழுப்பிவிட்டது, ஏழைகளுக்கென இலவச மனைகளாகவும் வழங்கியிருக்கிறது.

     தண்ணீர் எங்கே வருகிறது என்ற கேள்வியைக் கேட்கிறார்கள். படிப்படியாக நீர்வரத்தை மூடிவிட்டு வீடு கட்டினால் தண்ணீர் வரத்து இருக்காதுதான்.
பெருமழை பொழியும்போது பெருவெள்ளமாகப் பிரவாகம் எடுத்த தண்ணீர் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு செல்லும்போது, "வெள்ளம் வந்துவிட்டது' என்கிறார்கள். காரணம் என்னவென்று பார்க்கத் தவறுகிறார்கள்.
வெறுமனே பாசனத்துக்கும், கால்நடைகளுக்கும், வீட்டு உபயோகங்களுக்கும், குடிக்கவும் மட்டுமே தண்ணீர் தேவை என்பதல்ல, இந்தப் பூமிக்கும் தண்ணீர் தேவை இருக்கிறது. பூமியும்கூட இயங்கும் உயிரினம்தான். எந்தச் சந்தேகமும் தேவையில்லை.

    நிலத்தடியில் தண்ணீர் இருக்க வேண்டும். நிலத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சதவீதம் நல்ல தண்ணீர் கடலுக்குள் சென்று கடலின் உப்புநிலையைச் சமப்படுத்தவும் வேண்டும்.
எனவே, "கடலுக்குள் வீணாகக் கலந்தது' என்ற வாதமும்கூட சரியானதல்ல.
அதேநேரத்தில், தேவைக்கு பயன்படுத்தாமல் தவறிவிட்டோம் என்பதையும் சொல்லாமல் இருக்க முடியாது.
  
   அண்மையில் கர்நாடகத்தில் பெய்த மழையால் காவிரியில் "தானாக' வந்த தண்ணீர், காவிரி- கொள்ளிடத்தில் கரை ததும்பிச் சென்றும்கூட, அருகேயுள்ள சிறு வாய்க்கால்களும், குளங்களும் வழக்கம்போல மண்மேடாகக் காட்சி தந்ததையும் காண முடிந்தது.ரத்த நாளங்களை வெட்டிவிட்டு உடல் உறுப்பு செயல்படவில்லையென குறை சொல்ல முன்வந்திருக்கிறோமே. என்ன மருந்து சாப்பிட்டாலும், நவீன சிகிச்சை எடுத்தாலும், ரத்தம் செல்லாவிட்டால் உயிர் இருக்குமே தவிர, உடல் சடலம்தானே?

   எனவே, ரத்த நாளங்களைப் போன்ற வாய்க்கால்கள், குளங்கள் குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இப்போது அந்த விழிப்புணர்வு ஓரளவு ஏற்படத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இதை முழுமையாக - முறையாக வழிநடத்திச் செல்ல வேண்டியிருக்கிறது.அதோடு, அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் இருந்த நீர்வழிப் போக்குகள் குறித்து பட்டியல் எடுத்து, குறைந்தபட்சம் தற்போது எந்தச் சிக்கலும் (ஆக்கிரமிப்பு) இல்லாமல் இருக்கும் பாதைகளையாவது முதல் கட்டமாக கைவைத்து சீரமைத்து ஒழுங்கு செய்ய வேண்டும்.

    எதிர்காலத்தில் எந்த வகையிலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் இருக்கவும், அரசேகூட ஆக்கிரமிக்க வழியில்லாமல் செய்யவும் தீர்க்கமான தொலைநோக்குப் பார்வை கொண்ட சட்டத் திருத்தங்கள் அவசியம்.
அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தினால், எந்த மாநிலத்தாரிடமும்- எந்தக் காலத்திலும் தண்ணீருக்காக கையேந்தி நிற்கும் நிலை வராது.

   "யாரோ செய்கிறார்கள், நல்லவர்கள்' என்ற ஒற்றை வரி வியாக்யானத்தோடு நிறுத்திக் கொண்டு, கடந்து செல்லாமல் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் தன்னார்வ குழுவினரின் முயற்சிகளுக்கு கைகொடுத்து அவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும்.இயற்கை ஆர்வலர்கள் நீர்வழிப் பாதைகளைச் சீரமைக்க வேண்டிய அவசியம் குறித்து இன்னும் கூடுதலாக ஆய்வு செய்து, எளிமையாக தகவல் கையேடுகளை - பாடத் திட்டங்களை - வகுத்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். "சிரம்' கொடுத்துத்தான் தியாகம் செய்ய வேண்டுமென்பதில்லை, "கரம்' கொடுத்தும் செய்யலாம்.

No comments:

Post a Comment